
விடுதலைப் போராட்ட வீரர் தியாகி விஸ்வநாததாஸ், பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லத்தில் அன்னாரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விடுதலைப் போராட்ட வீரரும் தலைசிறந்த நாடக கலைஞருமான தியாகி விஸ்வநாததாஸ், சிவகாசியை சேர்ந்த சுப்பிரமணி பண்டிதர் ஞானம்மாள் தம்பதியினருக்கு 16.06.1886-அன்று பிறந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வாழ்ந்து வந்தார்.
தேசபக்தி பாடல்கள் மற்றும் நாடகத்தின் மூலமாக பொதுமக்களிடம் தேசபற்றை ஊக்குவித்தார். தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டு 29 முறை சிறை சென்றுள்ளார்.
தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகி விஸ்வநாததாஸ், மாண்பை உலகறியச் செய்யும் நோக்கில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நினைவில்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், அன்னாரது பிறந்த நாளான ஜீன் 16-ஆம் நாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தியாகி விஸ்வநாததாஸ், 136-வது பிறந்த தினமான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர்,
திருமங்கலத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸ் நினைவில்லத்தில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின்போது, வருவாய் கோட்டாட்சியர் (திருமங்கலம்) அபிநயா, திருமங்கலம் நகர்மன்றத் தலைவர் ரம்யா முத்துகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இ.சாலி தளபதி, நகராட்சி ஆணையாளர் டெரன்ஸ் லியோன் , வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.