முல்லை பெரியாறு – லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் | நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
Mullaperiyaru - Projects to supply drinking water to Madurai from Lower Camp area | Review by the Municipal Executive Director

மதுரை மாநகருக்கு முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து அம்ரூட் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆகியோர் (19.06.2022) ஆய்வு மேற்கொண்டனர்.
மதுரை மாநகராட்சியின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14.70 லட்சமாக உள்ளது. தற்போது மதுரை மாநகருக்கு வைகை அணையிலிருந்து 115 எம்.எல்.டி., வைகை ஆற்றுப்படுகையிலிருந்து 47 எம்.எல்.டி., காவேரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 30 எம்.எல்.டி. ஆக மொத்தம் 192 எம்.எல்.டி. குடிநீர் பெறப்பட்டு 100 வார்டு பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 100 லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப எதிர்காலத்தில் நாள் ஒன்றுக்கு 135 லிட்டர் வீதம் மொத்தம் 317 எம்.எல்.டி. குடிநீர் தேவைப்படு;ம். எனவே மதுரை மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் முல்லை பெரியாறு லோயர் கேம்ப்லிருந்து மதுரை மாநகருக்கு கூடுதலாக 125 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வருவதற்கு ரூ.1685.76 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியின் மூலம் மதுரை மாநகராட்சி 100 வார்டுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கப்பெறும்.
மதுரை மாநகருக்கு முல்லை பெரியாறு – லோயர் கேம்ப் பகுதியிலிருந்து அம்ரூட் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு வருவதற்காக முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் பிரதானக்குழாய் பதித்தல், பண்ணைப்பட்டி 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை மாநகர் வரை 54 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்தல், 38 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல், 1668 கி.மீ. நீளத்திற்கு குடிநீர் விநியோக்குழாய் பதித்தல் மற்றும் 2,80,000 எண்ணம் குடிநீர் இணைப்புகள் வழங்குதல் ஆகிய பணிகள் இத்திட்டத்தில் அடங்கும்.
அதன்படி சிப்பம்-1ல் லோயர் கேம்ப் பகுதியில் தலைமை பணியிடம் தடுப்பணை பணிகள், சிப்பம்-2 பண்ணைப்பட்டி ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு நிலையப்பணிகள் மற்றும் 125 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகளையும், சிப்பம்-3 அணைப்பட்டி பகுதி மற்றும் சுப்புலாபுரம் விளக்கு பகுதியில் இரும்பு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணிகளையும்; நகராட்சி நிர்வாக இயக்குநர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இக்குடிநீH திட்டப்பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெறும் மார்க்கெட் சாலைப் பகுதியில் இருப்பதால் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மார்க்கெட்டை மாற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், கீழ மாரட் வீதியில் செயல்படும் தயிர் மார்க்கெட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கும் பொருட்டு ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு நிரந்தர மேற்கூரைகள், தடுப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது நகரப்பொறியாளர் லெட்சுமணன், செயற் பொறியாளர் (குடிநீர்) பாக்கியலெட்சுமி, உதவி ஆணையாளர்கள் மனோகரன், சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், சுகாதார அலுவலர்கள் வீரன், சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.