முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள் செல்போன் மூலம் எடுக்கும் வசதி | மதுரை ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
Facility to take unreserved train tickets by cell phone | Notice of Madurai Railway Administration

தற்போது செல்போன் மூலம் வங்கி பண பரிமாற்றம், முன்பதிவு ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் விரைவாகவும் எளிதாகவும் நடைபெற்று வருகிறது. முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளையும் செல்போன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்கனவே நடப்பில் உள்ளது.
இருந்தாலும் செல் போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்த ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்ட நேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் முன் காத்திருக்க வேண்டியதில்லை. உரிய நேரத்தில் ரயில்களில் ஏறி பயணம் செய்யலாம். பெரும்பாலும் முன்பதிவில்லாத பயணிகள் பயணச்சீட்டுகள் பெற கடைசி நேரத்தில் வரும் சூழல் உள்ளது.
எனவே இருக்கின்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கால நேர விரயத்தை தவிர்க்கலாம். செல்போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் ஆப் – UTS APP என்ற செயலியை எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பின்பு அதில் செல்போன் எண், பெயர், பாஸ்வேர்டு, பாலினம், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
அதை சமர்ப்பிக்கும் போது நமது தகவல்களை சரிபார்க்க ஒரு ஓடிபி வரும். அதையும் செல்போனில் பதிவு செய்த பிறகு நாம் பயணச்சீட்டு பதிவு செய்ய தயாராகி விடுவோம். பயணச்சீட்டு தேவைப்படும் நேரத்தில் ரயில் நிலையத்திற்கு வெளியே மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட தூரத்தில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகளை பதிவு செய்யலாம்.
முதலில் செல்போன் எண் பாஸ்வேர்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி செயலியை முடுக்கி விடலாம். புறப்படும் இடத்தை தேர்ந்தெடுக்கும் போது அதுவாகவே நாம் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள மூன்று ரயில் நிலையங்களை தெரிவுசெய்யும். அதில் நமக்கு தேவையான நிலையத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம்.
நாம் செல்ல வேண்டிய ரயில் நிலையத்தை தேர்ந்தெடுக்க அந்த ரயில் நிலையத்தில் முதல் மூன்று ஆங்கில எழுத்துக்களை பதிவு செய்ய வேண்டும். அந்த மூன்று எழுத்தில் ஆரம்பிக்கும் பல்வேறு ரயில் நிலையங்கள் திரையில் தோன்றும். அதில் நமக்குத் தேவையானவற்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகள் இருந்தால் அதுவும் திரையில் வரும். அதில் நாம் செல்ல வேண்டிய ரயில் செல்லும் வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்பு திரையில் கட்டணம் தோன்றும். கட்டணத்தை மொபைல் பேங்கிங், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஆர் வாலட் ஆகியவற்றின் மூலம் செலுத்தலாம்.
பயணச்சீட்டு பதிவாகிவிடும். ரயில் பயணச்சீட்டு பரிசோதகர் டிக்கெட் கேட்கும்போது இந்த செயலியில் உள்ள show ticket குறியீட்டை அழுத்தி செல் போன் பயணச்சீட்டை காண்பிக்கலாம். நாம் அடிக்கடி ஒரு குறிப்பிட்ட நிலையத்திற்கு சென்றால், அதை பதிவு செய்து கொண்டால் Quick booking முறையை பயன்படுத்தி பயணச்சீட்டு விரைவாக பதிவு செய்யலாம்.
இந்த செயலியின் மூலமாகவே ஆர்வாலட்டில் பணத்தை ரீசார்ஜ் முடியும். பயணச் சீட்டுகள், நடைமேடை சீட்டுகள், சீசன் டிக்கெட் போன்றவற்றை இந்த செயலி மூலமாக எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். எனவே இந்த செயலியை பயன்படுத்தி விரைவான, எளிதான சேவையை பெறுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.