மாணவிகள் மீதான தொடரும் பாலியல் துன்புறுத்தல் குறித்து தமிழக அரசுக்கு மதுரை விமன் மாநில செயற்குழு கூட்டத்தில் கோரிக்கை
Madurai Women's State Working Committee meeting requested the Tamil Nadu government regarding the ongoing sexual harassment of female students

விமன் இந்தியா மூவ்மெண்ட் அமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் (ஜூலை.28) மதுரையில் நடைபெற்றது. மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பாயிஜா ஷப்ஃபீகா, மாநில செயலாளர் ரஹ்மத் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழக பள்ளி, கல்லூரிகளில் தொடரும் மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், மாணவிகளின் தற்கொலை மரணங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன. இவற்றை தடுக்க அரசு சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்றும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், கற்பிக்கும் முறையில் மறுபரிசீலனை செய்து, அச்சத்துடன் கல்வி பயிலும் நிலையை விட்டு தைரியமாக பாடத்திட்டங்களையும் மற்றும் தேர்வுகளையும் எதிர் கொள்ளும் அளவிற்கு மாணவிகளை உருவாக்கும் முறையை பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தின் வாயிலாக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
கனியாவூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாக கண்டறியப்பட வேண்டும். மாணவி மரணத்தில் உண்மையை கண்டறிந்து தொடர்புடைய குற்றவாளிகள் மீது தாமதமின்றி தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு தொடரக்கூடிய பாலியல் துன்புறுத்தல்கள், அங்கு நிகழும் சந்தேக மரணங்கள், தற்கொலை மரணங்களை கண்டித்தும், கல்வி வளாகங்களில் மாணவிகளின் பாதுகாப்பை வலியுறுத்தியும் பேரணி, கருத்தரங்கம், தெருமுனை கூட்டம், துண்டறிக்கை ஆகியவற்றை விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக தமிழகம் முழுவதும் நடத்தவும் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது.