
மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய மலைத்தொடர்கள், சில்லென்ற காற்று, ஜில்லென்ற சீதோசண நிலை, குறுகலான சாலை பயணம், பல கொண்டை ஊசி வளைவுகள், பச்சை பசேலன மலைகள், சுற்றிலும் மரங்கள், தேயிலை தோட்டம், ஆங்காங்கே சிற்றோடைகள் என இயற்கை பரிணாமங்களை தன்னகத்தை கொண்டுள்ள இயற்கை எழில் செழிந்த சுற்றுலாத்தலம் மாஞ்சோலை.
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் இருந்து 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்த ஊர். கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளன. இந்த மலையின் உயரம் சுமார் 1162 மீட்டர். இங்கு ஊட்டியைப் போலவே விதவிதமான தேயிலைகள் பயிரிடப்படுகின்றன. மாஞ்சோலைக்கும் உயரே 1000 அடி உயரத்தில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி போன்ற இடங்களில் உள்ள எஸ்டேட்களில், அதிகளவில் தேயிலை தோட்டங்கள் உள்ளன.
2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலை தொழிலில் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களில் பெரும்பாலனோர் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமப் பகுதிகளிலிருந்து வேலைக்காக இங்கு வந்து குடியேறியவர்கள். இவர்கள் தங்கி வேலை செய்வதற்காகத் தேயிலை தோட்ட நிர்வாகமே வீடுகள் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
தேயிலை தோட்டங்களை ரசித்த படி, சுற்றிலும் மலைத்தொடர்களையும், இயற்கை வளங்களையும் பார்த்து ரசிக்க அருமையான இடமாக மாஞ்சோலை விளங்குகிறது. தமிழகத்தின் மற்ற மலைப்பிரதேசங்களை போல் அல்லாமல் களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. காடுகளில் புலிகளும், சிறுத்தை, யானை, கரடி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் அவ்வப்போது வலம் வரும்.
மாஞ்சோலை வாட்சிங் டவரில் ஏறி நின்று பார்த்தால் நான்கு பக்கமும் இயற்கை எழில் கொஞ்சும் மலைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம். திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றாலம், பாபநாசம், காரையாறு, களக்காடு மற்றும் அகஸ்தியர் அருவி, அணைக்கட்டுகள், பறவைகள், புலிகள் சரணாயலயங்கள் என எத்தனையோ இயற்கை சூழ்ந்த இடங்கள் சுற்றுலா பயணிகள் ரசித்து வருகின்றனர். இவற்றிற்கெல்லாம் மகுடமாகத் திகழ்வது இந்த மாஞ்சோலை.
இங்கு கிடைக்கும் தேயிலை சுவையாகவும், மணமாகவும் இருக்கிறது. மலைப்பகுதியில் கிடைக்கும் தண்ணீர் சுத்தமாகவும், சுவையாகவும் இருக்கும். இங்கு சுற்றுலா மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு வனச்சரக அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். மாஞ்சோலையில் தங்குவது என்றால் அதற்கும் வனத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
வனத்துறைக்கு சொந்தமான விடுதிகள் தவிர, தனியார் விடுதிகள் எதுவும் கிடையாது. கோடை வெயில், பரபரப்பான வாழ்க்கை சூழல் மற்றும் இயற்கையோடு குதூகலிக்க மாஞ்சோலை ஒரு சிறந்த சுற்றுலா ஸ்பாட்டாக உள்ளதால் நாமும் ஒரு முறை ரசித்து விட்டு வரலாம்.