
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் (26.06.2022) நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், கோயில் யானை பார்வதிக்கு கண் பார்வை பாதிப்பு சிகிச்சை மேற்கொள்வது தொடர்பாக தாய்லாந்து மருத்துவர்கள் குழு மேற்கொண்ட ஆய்வினை நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் யானை 26 வயதான பார்வதி. யானையின் இரு கண்களிலும் கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டு, கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
யானைகள் மருத்துவத்தில் நமது கால்நடை பராமரிப்பு துறையில் மூலம் சிறந்த தொழில் நுட்பங்கள் உள்ளன. மருத்துவவர்களின் தொடர் சிகிச்சையின் மூலம் பாதிப்பு மேலும் தீவிரமடையாமல் தடுக்கப்படுகிறது. இருப்பினும் யானையின் கண் பார்வையில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏதும் ஏற்படாத சூழ்நிலையே இருந்து வருகிறது.
இந்நிலையில் யானைகள் தேசமான தாய்லாந்து நாட்டில் இருந்து யானைகள் மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் வீடியோ கான்பரண்ஸ் வழியாக பார்வதி யானையை பார்வையிட்டு சிகிச்சை தொடர்பாக ஆலோசனை வழங்கி வந்தனர்.
இன்றைய தினம் தாய்லாந்து கசிசார்ட் பல்கலைக்கழக கால்நடை இணை பேராசியர் நிக்ரோன் தோங்திப் தலைமையிலான 7 பேர் கொண்ட கால்நடை மருத்துவக் குழு மீனாட்சி அம்மன் கோவிலில் யானை பார்வதியை நேரில் பார்வையிட்டு கன்புரை பாதிப்பு எந்த அளவு உள்ளது, எவ்விதமான சிகிச்சை அளிக்க வேண்டுமென ஆய்வு செய்துள்ளனர்.
நாளை சென்னையிலிருந்து ஒரு மருத்துவ குழு பார்வதி யானையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளது. இம்மருத்துவ குழு அலுவலர்கள் ஒருங்கிணைந்து யானை பார்வதிக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர்., மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் செல்லத்துரை, துணை ஆணையர் அருணாச்சலம் உட்பட பலர் உடனிருந்தனர்.