மதுரை மடீட்சியாவில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்: வணிகவரி&பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பார்வையிட்டார்
Corona 19

மதுரை மாநகராட்சி மடீட்சியா வளாகத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர். இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் இன்று (28.05.2021) பார்வையிட்டு பேசும்போது தெரிவித்ததாவது :
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி சீரிய முயற்சியின் விளைவாக தமிழகம் எங்கும் தடுப்பூசி முகாம் முதற்கட்டமாக தொழிற்சாலைகளின் பணியாளர்கள், போக்கு வரத்துத்துறை, ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிட தொழிலாளர்கள், கோயில் பணியாளர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றுவர்களுக்கு 65000 தடுப்பூசிகள் தொடர்ந்து மூன்று தினங்களாக ஆங்காங்கே முகாம்கள் மூலம் நடைபெற்று வருகிறது. மடீட்சியாவில் இன்று நேரடியாக 1500 நபர்களுக்கும், மறைமுகமாக 10000 ஊழியர்களுக்கும் போடப்படுகிறது.
மதுரையில் கொரோனா தடுப்பு பணிக்காக அரசு இராசாசி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு அவர் சார்பில் ஒருவர்தான் இருக்க வேண்டும் மற்றவர்கள் எல்லாம் வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு நோயாளிகளுக்கும், உதவியாளர்களுக்கும் மூன்று நேரங்களும் உணவுகள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக மதுரை மாநகரில் கொரோனா தொற்று நோய் என்பது குறைய ஆரம்பித்துள்ளது.
மக்களை காப்பாற்றக்கூடிய வேலையில் அரசியல் பண்ணுவதற்கு உகந்த நேரம் அல்ல. எதிர்கட்சியினர் அவர்களது ஆலோசனையினை வழங்குங்கள் என்று இரண்டு முறை நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை கடந்த ஆட்சியில் இருந்தது. தேர்தல் காலத்தில் இரண்டு மாதகாலம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர்.
6 மாநிலங்களில் கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிகளவில் உள்ளது. மதுரை மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுத்து உள்ளார். கிராமப்புறங்களில் 100 ஊராட்சிகளில் 10 படுக்கைகள் அமைக்கப்பட்டு 420 ஊராட்சிகளிலும் செவிலியர்கள் மூலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாக காய்ச்சல் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருமங்கலம் தொகுதியில் கல்லுப்பட்டி, பேரையூர் உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக கணக்கெடுக்கும்பணி நடைபெறுகிறது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் உள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள் 60 உள்ளது. அதில் 15 நோயாளிகளின்தான் உள்ளார்கள். அங்கு வருபவர்களை சேர்ப்பதற்கு எல்லா வழிவகையும் உள்ளது. மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் உள்ளது. கொரோனா நோயை கட்டுப் படுத்துவதற்கும், தேவைகளை நிறைவேற்றுவதற்கும் வேண்டிய பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளுக்கும் 8 முதல் 10 டன் ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று கிராமப் புறங்களில் தற்போது ஆரம்பித்து உள்ளது. அதனை ஆரம்ப கட்டத்திலேயே ஆரம்ப சுகாதார நிலையம், தாலுகா மருத்துவமனை, மருத்துவர்களை அனுப்பி முதலுதவியாக வீட்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து அறிகுறி தென்படுபவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை செய்வதற்கான பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆக்சிஜன் தேவைப்படும்பட்சத்தில் அரசு இராசாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்பதற்கு முன்பாகவே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி இந்திய வரலாற்றிலேயே 21 நாட்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து உள்ளார்கள். தற்பொழுது 6 மாவட்டங்களுக்கு அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்கள். இந்த அரசு யாரையும் புறக்கணிக்க வில்லை. எந்த தொகுதியிலும் பாரம்பட்சம் இல்லாமல் கொரோனா தடுப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. கட்சி வேறுபாடுமல்லாமல் மக்களை காப்பாற்றுகின்ற அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
குறைபாடுகள் இருந்தால் நிறைவு செய்வதற்கு தயாராக இருக்கிறோம். நோய் அறிகுறி தெரியாமல் நோயின் தாக்கம் அதிகமானபிறகு மருத்துவமனைக்கு வருவதால் இறப்பு விகிதம் அதிகமாக ஏற்படுகிறது. ஆக்சிஜன் இல்லாமல் இறப்பு ஏற்படுவது இல்லை என்றார்.
இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள்தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மடீட்சியா தலைவர் முருகானந்தம், அறக்கட்டளை தலைவர் பி.டி.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் திரு.மணிமாறன், மேலாளர் ராமசாமி, நகர்நல அலுவலர் மரு.குமரகுருபரன், உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சித்திரவேல், நவீன்பாண்டியன், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.