மதுரை பெரியார் பேருந்து நிறுத்த பணிகள் மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும்; சு.வெங்கடேசன் எம்.பி
Madurai News

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாரம்பரிய நடைபாதை பணிகளான திருமலை நாயக்கர் மகாலை சுற்றியுள்ள பூங்கா மேம்பாட்டு பணிகள், விளக்குத்தூண், பத்துத்தூண், மாசி வீதிகளில் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை பணிகள், நான்கு சித்திரை வீதிகளில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் குன்னத்தூர் சத்திரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் ஆகிய பணிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் (11.01.2021) ஆய்வு மேற்கொண்டு பேசும்போது தெரிவித்ததாவது:
மதுரை மாநகராட்சியில் சீர்மிகு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பாரம்பரிய நடைபாதை பணிகளில் முதலாவதாக திருமலை நாயக்கர் மகால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா பணிகளையும் மற்றும் இதர பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு மேற்கொள்கிறேன்.
மதுரை மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல், கடுமையான தூசி, காற்று மாசுபாடு, மதுரையில் காற்று மாசு சென்னையை காட்டிலும் அதிகமாக உள்ளது. நேற்று சென்னையின் காற்று மாசு குறியீட்டு எண் 117 மதுரையின் காற்று மாசு குறியீட்டு எண் 109 ஏறக்குறைய 8 தான் வித்தியாசம் அந்த அளவிற்கு காற்று மாசுபாடு ஏற்பட்டு உள்ளது.
ஒரு மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறும் போது இது போன்று ஏற்படுவதை தவிர்க்க முடியாது. வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றாலும் மக்களுக்கு குறைவான சிரமத்தை ஏற்படுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் நடைபெற்று வரும் 14 பணிகளில் ஒரு பணி மட்டும் கடந்த செப்டம்பரில் முடிக்கப்பட்டுள்ளது என்றும், மீதமுள்ள 13 பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கவும், சரியான திட்டமிடுதல்படி நடைபெறுகிறதா என்பதையும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சரியான பணிகள் முறையாக தரமாக கொடுப்பதை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் என்னால் ஆன முயற்சிகள் செய்து வருகிறேன்.
மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளான வைகை வடகரையில் உள்ள 15 வார்டு பகுதிகளுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.275 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
வைகை தென்கரையில் உள்ள மீதமுள்ள வார்டுகளுக்கு உரிய நிதியுதவி பெற்றவுடன் பணிகள் விரைவில் துவங்கப்படும். வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்துககள் நிறுத்த பணிகள் முடிக்கப்பட்டு நகரப்பேருந்துகள் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மதுரை மாவட்ட ஆலோசனைக்குழு கூட்டம் ஜனவரிக்குள் நிச்சயமாக கூட்டப்படும்.
இந்த ஆய்வின் போது நகரப்பொறியாளர் அரசு, செயற் பொறியாளர் முருகேசபாண்டியன், உதவி செயற்பொறியாளர் (திட்டம்) சுரேஷ்குமார், ஆரோக்கிய சேவியர், மனோகரன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவிப் பொறியாளர்கள் பாலகுருநாதன், ஜாகிர் உசேன், திருப்பதி, கந்தப்பா உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.