மதுரை செக்கானூரணி கேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒலிம்பியாட் செஸ் போட்டி | கலெக்டர் பார்வையிட்டார்
Madurai Chekanurani Karen Matriculation Olympiad Chess Tournament | Collector visited

மதுரை செக்கானூரணி கேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியை (20.07.2022) மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் தெரிவித்ததாவது:- உலகம் முழுவதும் 187 நாடுகளில் இருந்து சென்னையில் நடைபெறும் ஒலிம்பியாட் செஸ் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். கடந்த ஒலிம்பியாட் செஸ் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது, சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறும் ஒலிம்பியாட் செஸ் போட்டியினை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் சதுரங்கப் போட்டியினை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு உறுதுணையாக தனியார் அமைப்பினரும் ஒலிம்பியாட் செஸ் விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்று விளம்பரப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியதாகும்.
சதுரங்கப் போட்டியானது அறிவியல் பூர்வமாக சிந்தித்து விளையாடக்கூடிய விளையாட்டாக அறியப்படுகிறது. தற்காலத்தில் சமூக வலைதளத்தின் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். இத்தாக்கத்தில் இருந்து வெளியேற இளைய தலைமுறையினர் சதுரங்கப் போட்டியை கற்றுக் கொள்வது சிறந்ததாகும். செஸ் ஒலிம்பியாட் போட்டியினை விளம்பரப்படுத்தும் வகையில் மதுரை மாவட்டத்திற்கு வருகின்ற 25.07.2022-அன்று ஒலிம்பியாட் ஜோதி (Olympiad Prestigious Torch) வருகை தர உள்ளது. இதனை மிகச்சிறப்பான முறையில் வரவேற்கும் விதமாக விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியவர் மரு.எஸ்.அனீஸ் சேகர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், பி.என்.ஐ அமைப்பினர் மற்றும் கேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.