
மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான முன்னேற்பாடு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவிக்கையில்:-
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், போதைப் பொருள் விற்பனை செய்யும் கடைகளை கண்டறிந்து அபராதம் விதிப்பதோடு சீல் செய்திடவும் உணவு மற்றும் காவல்துறை அலுவலர்கள் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்படுத்தும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக தனியாக ஆலோசனை வழங்குவதோடு, பெற்றோர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான மற்றும் தீமைகள் குறித்து விளம்பர பதாகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாரம் 11.08.2022 முதல் கொண்டாடப்பட உள்ளது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி மாணவ, மாணவியர்களிடம் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திட அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், காவல்துறை கண்காணிப்பாளர் சிவன்நாத் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.