
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையம் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில உணவு ஆணையத் தலைவர் ஆர். வாசுகி, (ஓய்வு) தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநில உணவு ஆணையத் தலைவர் ஆர். வாசுகி (ஓய்வு) தெரிவித்ததாவது:-
சமூகத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள, திருநங்கைகள், கணவனால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கி அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.
கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
மேலும், நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகாரப் படிவங்கள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என மாநில உணவு ஆணையத் தலைவர் திருமதி.ஆர். வாசுகி, இ.ஆ.ப (ஓய்வு) அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்கள், கூட்டுறவுத் துணைப் பதிவாளர்கள், சத்துணவுத் திட்ட அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.