மதுரையில் சண்டை கிடாய், சேவல்களை வேட்டையாடும் தெரு நாய்கள்; கண்டுகொள்ளாத மாநகராட்சி
உரிய நடவடிக்கை எடுக்க வளர்ப்பாளர் கோரிக்கை

மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வயிற்றில் குட்டிகளுடன் இருந்த மூன்று சண்டை கிடாய்கள் மற்றும் சண்டைக் கோழிகளை கடித்துக் குதறியது தெரு நாய்கள். இந்த தாக்குதலில் வயிற்றில் குட்டியுடன் இருந்த இரண்டு பெட்டை கிடாய்கள் மற்றும் நான்கு சண்டை சேவலகள் பரிதாபமாக இறந்துவிட்டன. இந்த சம்பவம் தங்களது பங்களாவில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இதன் உரிமையாளர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மதுரை ரேஸ்கோர்ஸ் பகுதியில், எம்.ஆர்.டி.பங்களா (MRT) உள்ளது. இவர்கள் நான்கு தலைமுறைக்கும் மேலாக தமிழக பாரம்பரிய விளையாட்டான சண்டைகிடாய் மற்றும் சண்டை கோழிகளை வளர்த்து வருகின்றனர். மதுரையில் முட்டுகிடாய் வளர்ப்பிலும், சண்டை கோழி வளர்ப்பிலும் பெயர் வாங்கிய இவர்களது பங்களாவில் அப்பகுதியில் வசித்து வரும் தெருநாய்கள் உள்ளே நுழைந்து தொடர்ந்து வேட்டை நடத்தி வருவதாகவும், இதனால் பலமுறை ஆடுகள் மற்றும் கோழிகள் கடிபட்டு பரிதாபமாக இறந்துவிட்டதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து இதன் உரிமையாளர் சாகுல் நம்மிடம் தெரிவிக்கையில், பல காலமாகவே இங்கிருக்கும் தெருநாய்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. இரவு ஆனாலே வேட்டை ஆட பங்களாவிற்குள் நுழைந்துவிடுகின்றன. நாங்களும் பலவித நடவடிக்கைகள் எடுத்துப் பார்த்தும் பலன் இல்லை. அதிகாலை 3 மணி வரை நாங்கள் பாதுகாத்துக் கொண்டிருப்போம். ஆனால், எங்கள் கண்ணில் மண்ணைத்தூவி நாங்கள் அசந்த நேரத்தில் தெரு நாய்கள் உள்ளே புகுந்து எங்களது கிடாய்கள் மற்றும் சேவல்களை கடித்து குதறி விடுகின்றன.
இதுபோல் இங்கு பலமுறை நடைபெற்றுள்ளது. இது குறித்து மாநகரட்சியிடம் பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் எந்தவித பயனும் இல்லை. சண்டை கிடாய் மற்றும் சண்டை கோழிகளை வளர்ப்பது என்பது சவாலான விசயம். எங்கள் குடும்பத்தில் ஒரு உறுப்பினர்போல வளர்த்து வருகின்றோம். இதுபோல் தெரு நாய்களால் கடிபட்டு, இறப்பதை பார்க்கும்போது மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்களின் வழக்கப்படி பாதுகாப்பிற்காக நாய்கள் வளர்ப்பது இல்லை என்பதால் இதனை தடுக்க இயலவில்லை.
மேலும் எங்களது பங்களா தடுப்புச் சுவர்களை மிக எளிதாக தாண்டி, தாக்குதல்களை நடத்துகின்றது. எனவே, மதுரை மாநகராட்சி இதனை கருத்தில் எடுத்துக் கொண்டு, இங்கிருக்கும் தெரு நாய்களை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும், நாங்களும் கூடுதலாக பாதுகாப்பிற்கு தேவையான வழிகளை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.