
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தி 17 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மாவட்ட, மாநில அளவிலான கலைப் போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
இதில் குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஒவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான போட்டிகள் 10.06.2022 அன்று மதுரை மாவட்டம், பெரியார் பேருந்து நிலையம் அருகில் பாண்டி பஜார் ரோடு, மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் மற்றும் குவியம் ஆகிய 5 போட்டிகள் காலை 09.00 மாணி முதல் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனி நபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.
குரலிசை போட்டியிலும் நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டு வாத்தியம், மாண்டலின் கிதார், சாக்சபோன், கிளாரினெட், தமிழ்பாடல்கள் இசைக்கும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்கு பெறலாம்.
தாளக் கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல் ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் 5 தமிழ் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள் போட்டியில் பங்கேற்கலாம்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.
ஒவியப்போட்டியில் பங்கேற்பவர்களுடைய ஒவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர் வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஒவியங்கள் வரையப்பட வேண்டும்.
அதிக பட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விபரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளம் வாயிலாக www.artandculture.tn.gov.in பெறலாம். அல்லது கலை பண்பாட்டுத் துறையின் மதுரை மண்டல அலுவலகத்தின் 9842596563 தொலைபேசி எண்ணை 0452-2566420 தொடர்புக் கொள்ளலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க மதுரை மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.