
மதுரை லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரிடம் மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த சபீர் அகமது என்பவருடைய மகன் பயாஸ்கான் என்பவரது இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பாக பழகிவந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சிறுமியை காதலிப்பதாக கூறி அவ்வப்போது பாலியல் தொந்தரவு அளித்துவந்துள்ளார். மேலும் ஆசை வார்த்தைகளை கூறி சிறுமியிடம் இருந்து அவ்வப்போது பணத்தை ஏமாற்றி வாங்கியுள்ளார்.
அதோடு ஆடைகள் மற்றும் படிப்பு செலவிற்கு பணம் தேவை என சிறுமியிடம் நைசாக பேசிய இளைஞர் பயாஸ்கான் சிறுமியின் வீட்டில் இருந்து 10 பவுன் தங்க செயினை எடுத்துவருமாறு வற்புறுத்தியுள்ளார்.
இதனையடுத்து வீட்டிற்கு தெரியாமல் 10 பவுன் செயினை சிறுமி எடுத்து வந்த நிலையில் பயாஸ்கானின் நண்பர்களான புதூரைச் சேர்ந்த சதீஷ் மற்றும் சரவணக்குமார் ஆகியோர்கள் உதவியோடு சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமியும் சேர்ந்து மதுரை கோ.புதூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகையை 2லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்துள்ளனர்.
அந்த பணத்தில் பயாஸ்கான் ரூ.1லட்சத்தி 70 ஆயிரம் ரூபாயும் , அவனது நண்பர்கள் சதீஷ் 20ஆயிரமும், சரவணக்குமார் 30ஆயிரம் ரூபாயையும், சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி 50ஆயிரம் ரூபாயையும் பங்குபோட்டுக் கொண்டுள்ளனர்.
சிறுமியின் வீட்டில் தங்க செயின் காணாமல் போனதை கண்ட பெற்றோர்கள் சிறுமியிடம் துருவி துருவி விசாரித்த போது சிறுமி நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறினார். உடனே தனது மகளை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், 4லட்சம் ரூபாய் நகையை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறி சிறுமியின் தாயார் தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் பாலமுருகன், சார்பாய்வாளர் அதிகுந்த கண்ணன் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஏமாற்றியதாக கோ.புதூரைச் சேர்ந்த பயாஸ்கான் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவரது நண்பர்கள் சதீஷ், சரவணக்குமார் மற்றும் சரவணக்குமாரின் தாயார் முத்துலெட்சுமி ஆகிய 4 பேர் மீது மோசடி வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 4 லட்சம் மதிப்பிலான 10 பவுன் தங்க நகையையும் பறிமுதல் செய்தனர்.
சிறுமியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த நகையை மீட்ட தனிப்படையினருக்கு காவல்துறை ஆணையர் செந்தில்குமார் பாராட்டு தெரிவித்தார்.