மதுரையில் ஆடி 1ல் இடியுடன் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்த மழை
Rain for one hour with thunder in Madurai on Adi 1

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூரின் மலைப்பாங்கான பகுதிகள், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி மதுரை மாவட்டத்தில் பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் இடி – மின்னலுடன் கனமழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. ஆடி 1ந் தேதி காத்தடிக்கும் என எதிர்பார்த்த நிலையில், நல்ல மழை கொட்டி தீர்த்தது.
மதுரையில் மாட்டுத்தாவணி, அண்ணாநகர் வண்டியூர் சிம்மக்கல், காமராஜர் சாலை, பெரியார் பேருந்து நிலையம், புதூர், திருப்பாலை, பழங்காநத்தம், பொன்மேனி, காளவாசல், பசுமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி -மின்னலுடன் கன மழை பெய்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் பல்வேறு பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான சிலைமான், கருப்பாயூரணி, சக்கிமங்கலம்,அழகர்கோவில் சத்திரப்பட்டி, அவனியாபுரம் விமான நிலையம் திருநகர் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.