புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாம் | மேயர் வ.இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்
Free Booster Vaccination Camp at Budur Urban Primary Health Center | Mayor V. Indrani Ponvasant inaugurated it

மதுரை மாநகராட்சி புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயது முதல் 59 வயது உள்ளவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமினை மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர்,மாநகராட்சி ஆணையாளர் திரு.சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் இன்று (15.07.2022) துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
மாண்புமிகு தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் 2வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கழித்து பூஸ்டர் தடுப்பூசி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜனவரி 2022 முதல் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது.
தற்போது முன்னெச்சரிக்கை தவணை 9 மாதம் கால இடைவெளி குறைக்கப்பட்டு இரண்டாம் தவணை செலுத்தி 6 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்து வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் முன்னெச்சரிக்கை தவணை இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்றும், அதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் மாநிலம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 10, 2022 முதல் 18 வயது முதல் 59 வரை உள்ளவர்களுக்கு தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. தற்போது இலவச பூஸ்டர் தடுப்பூசி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று 15.07.2022 முதல் 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரை உள்ளவர்களுக்கு இலவசமாக வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சென்னையில் இன்று இலவச பூஸ்டர் முகாமினை துவக்கி வைத்ததை தொடர்ந்து மதுரை மாநகராட்சி மண்டலம் 1 வார்டு எண்.14ல் உள்ள புதூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமினை மேயர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் துவக்கி வைத்து பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, உதவி நகர்நல அலுவலர் மரு.தினேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், மண்டல மருத்துவ அலுவலர் மரு.கோதை உட்பட மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.