
மதுரை அருகே, பசுமலை சி.எஸ்.ஐ. பள்ளியில் போக்குவரத்து பிரிவு போலீஸார் சார்பில், சாலை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இந்த பிரசாரத்தை, திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன், தொடங்கி வைத்து பேசியது:
சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது, தலைக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தலைக் கவசம் அணிவதால், விபத்தின் போது உயிர் காப்பாற்றப்படும். உயிர் என்பது விலை மதிப்பில்லாது.
18 வயதுக்கு கீழ் உள்ள மாணவர்கள், இரு சக்கர வாகனத்தை தனியாக இயக்கக் கூடாது. மது போதையில் இரு சக்கர வாகனங்களை நாம் இயக்கினால், சாலையில் விபத்து நேரிடலாம்.
ஆகவே, மாணவ, மாணவியர்கள் விழிப்புடன் இருப்பதுடன், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆய்வாளர் திலகர், சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி மற்றும் போக்குவரத்து போலீஸார் பங்கேற்றனர்.