தொழில் வணிகத்துறை சார்பாக மதுரையில் ஏற்றுமதி வணிகர்களுக்கான விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம்
Awareness seminar for exporters in Madurai on behalf of the Department of Industry and Commerce

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (06.05.2022) தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்தியன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், முன்னிலையில் தொழில் வணிகத்துறை சார்பாக ஏற்றுமதி வணிகர்களுக்கான விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்தியன் தெரிவித்ததாவது:-
நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்றுமதி மிக முக்கிய அங்கமாக உள்ளது. ஏற்றுமதியை ஊக்குவிப்பது தேசிய மற்றும் மாநில அளவில் நன்மை பயக்கும். இது வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன், தொழிலாளர் உற்பத்தித்திறனை மேம்படுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது.
22.09.2022-அன்று சென்னையில் நடைபெற்ற ஏற்றுமதி மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு உத்தியினை வெளியிட்டு தமிழ்நாட்டில் 10 ஏற்றுமதி மையங்கள் திருப்பூர், கரூர், மதுரை, ஆம்பூர், தூத்துக்குடி, பொள்ளாட்சி, காஞ்சிபுரம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்கள்.
மதுரை மாவட்டத்தில் ஆயத்த ஆடைகள், உணவுப் பொருட்கள், பொம்மைகள், ரப்பர் பொருட்கள், கயிறு பொருட்கள், பொறியியல் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட தொழில் மையங்களில் மாவட்ட ஏற்றுமதி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏற்றுமதி மையங்களின் செயல்திறனை அதிகரிக்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்தியன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தின் போது, கூடுதல் ஆணையர் கிரேஸ் லால்டிரின்டிக்கி பச்சாவ், இணை இயக்குநர் சொக்கலிங்கம் அவர்கள், மதுரை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மா.இராமலிங்கம் அவர்கள், மடீட்சியா தலைவர் சம்பத் அவர்கள், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.