
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூரில் கடந்த 2012 ஆம் ஆண்டு மத்திய அரசால் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது . அமைக்கப்பட்ட நாள் முதலே உள்ளூர் வாங்க ஓட்டிகளுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் பல்வேறு வாக்குவாதங்களும் போராட்டங்களும் நடைபெற்றன.
அதாவது, நகர் பகுதியில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என்பது விதி , தற்போது அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடி 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால், பலமுறை உள்ளூர் வாகன ஓட்டிகள் நீதிமன்றத்தை நாடி எந்த பலனும் ஏற்படாத காரணத்தினால் , பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக சுங்கச்சாவடி நிர்வாகத்தினரால், உள்ளூர் வாகன ஓட்டிகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக, தங்களது வாகனம் இரண்டு ஆண்டுகளாக ஆயிரத்திற்கு மேற்பட்ட முறை சுங்கச்சாவடியை கடந்துள்ளதால் ரூபாய் 1.50 லட்சம் முதல் 2 லட்சம் வரை வரி செலுத்த வேண்டும் என, வழக்கறிஞர் மூலமாக தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த பிரச்சனை பெரும் விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில், தற்போது, இத்தொகுதியில் எம்எல்ஏவும் முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர் பி உதயகுமார்,எம் எல் ஏ ஐயப்பன் உட்பட தனது கட்சி நிர்வாகிகள் 150 க்கும் மேற்பட்டோர் உடன் அனுமதி இன்றி சுங்கச்சாவடி அருகில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதற்கு, காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தவுடன் , அனுமதியின்றி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை கைவிடக் கூறி வலியுறுத்தினர். அதற்கு, ஆர்பி உதயகுமார் அமைதியான முறையிலேயே போராட்டம் நடத்துவதாகவும் , வீன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக பேருந்து ஏற்றி கைது செய்தனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.