
மதுரை மாவட்டம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள திருமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட 7,160 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும ஓய்வூதியதாரர்களுக்கு முதன்முறையாக பொங்கல் பரிசுத் தொகுப்பினை, மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியம் கட்டுமானத் தொழிலாளர்களின் நலன் மற்றும் சமூக பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டு தொழிலாளர் துறையின் கீழ் 1994 முதல் செயல்பட்டு வருகிறது. கோவிட் 19 நோய் தொற்றின் காரணமாக கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2021-ஆம் ஆண்டில் அறுவடை திருநாளை கொண்டாடும் வகையில் பதிவுபெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அரசாணை எண் 195, நாள் 24.11.2020-ன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழஙக் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு என்பது ரூ.695 மதிப்புடைய பச்சரிசி 2 கிலோ, பாசிப்பருப்பு 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, சமையல் எண்ணெய் 500 கிராம், நெய் 100 கிராம், முந்திரி 25 கிராம், உலர் திராட்சை 25 கிராம், ஏலம் 5 கிராம் மற்றும் வேட்டி, அங்கவஸ்திரம் (ஆண் தொழிலாளர்களுக்கு) அல்லது சேலை (பென் தொழிலாளருக்கு) ஆகிய பொருட்கள் அடங்கியது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் இப்பணி தமிழக முதலமைச்சரால் 08.01.2021 அன்று சென்னையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 34,859 பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.2,42,27,005 மதிப்பில் இன்று முதல் (10.01.2021) 12.01.2021 வரை இப்பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட உள்ளன. திருமங்கலம் தாலுகாவில் மட்டும் 4712 ஆண்கள் மற்றும் 2447 பெண்கள் ஆக மொத்தம் 716 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.49,76,200 மதிப்பில் வழங்கப்பட உள்ளது.
மேலும், தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை ரூ.5 இலட்சமாக வழங்குவதற்கு மாண்புமிகு அம்மா அவர்கள் அரசாணை பிறப்பித்தார்கள். மேலும் விபத்து நடந்த இடத்தில் இறந்தால் தான் விபத்து மரண உதவித்தொகை வழங்க இருந்ததை சிகிச்சை பெற்று இறந்தாலும் ரூ.5 இலட்சம் வழங்க உத்தரவிட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை கூடுதல் ஆணையாளர் டி.குமரன், இணை ஆணையாளர் பி.சுப்பிரமணியன், உதவி ஆணையாளர் மைவிழிச்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மதுரை மாவட்டம், மெகபூப்பாளையம் செவன்த் டே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 6,077 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முதன் முறையாக தைப் பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ(10.01.2021) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை கூடுதல் ஆணையாளர் டி.குமரன் , இணை ஆணையாளர் பி.சுப்பிரமணியன், உதவி ஆணையாளர் மைவிழிச்செல்வி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.