தமிழ் சினிமா நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். MGR முதல்வர் ஆன பின் வழக்கமாக கோட்டைக்குச் செல்லும் தனக்கு வந்திருக்கும் கடிதங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு செல்வது வழக்கம். அப்படி ஒரு நாள் கோட்டைக்கு புறப்படும் முன் மலை என குவிந்து இருந்த கடிதங்களில் கிளி ஜோசியர் எடுப்பதை போல ஒரு கடிதத்தை எடுக்கிறார். காரில் கோட்டைக்கு போய் கொண்டே அந்தக் படிக்கிறார்.
அது ஒரு திருமண பத்திரிகை. அந்த திருமண பத்திரிகையில் எந்த ஒரு இடத்திலும் புரட்சிதலைவர் பேரோ அல்லது கட்சிக்காரர் பேரோ இல்லை. சரி, இதை யார் அனுப்பியது என்று பார்க்கிறார் அதில் தான் யார் ? என்ன விவரம் ? என்று எந்த தகவலும் இல்லை. வெறும் திருமண பத்திரிகை மட்டும் இருந்தது. முக்கியமாக அதில் எந்தவித உதவியும் கேட்கப்படவில்லை, எம்ஜிஆர் கலந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் இல்லை.
இப்படிப்பட்ட கடிதத்தை பார்த்தவுடன், காரில் சென்று கொண்டிருக்கும் போதே எம்ஜிஆர் மனதில் ஏதோ தோன்றியது. அதன் பிறகு தன் ரகசிய காவல் நண்பர் மற்றும் ஒரு கட்சிக்காரரை வர சொல்லி இந்த பத்திரிக்கை அனுப்பியது யார் ? அவர் எங்கு இருக்கிறார் ? என்ற விவரங்களை சேகரிக்க சொல்கிறார் எம்ஜிஆர்.
பத்திரிகையில் இருந்த முகவரியைக் கொண்டு பார்த்ததில் அது சென்னை வடபழனி ராம் தியேட்டர் அருகில் என்று தெரிய வந்தது. உடனடியாக அங்கு சென்று பார்க்கும் போது, அந்த தியேட்டரின் முன்னால் இருந்த பிளாட்பாரத்தில், ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி உள்ள இடம் என்று தெரிய வந்தது.
அவர் செருப்பு தைக்கும் பொருட்களுடன், சாமி படங்கள் கூட இல்லாமல் அந்த பெட்டியின் மேல் இதய தெய்வம் எம்ஜிஆர் படம் மட்டும் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த விவரங்களை கேட்டறிந்த பொன்மனம் தன் மகள் திருமணம் நடக்கும் விஷயம் தனக்கு தெரிய வேண்டும். ஆனால் அதற்கு எந்த உதவியும் கேட்காத அந்த உண்மைத் தொண்டனை நினைத்து உருகுகினார்.
திருமண நாளும் வந்து விட்டது. காலை 9.00 மணிக்கு முகூர்த்தம். 8.45 மணி அளவில் அந்த ஏழை தொழிலாளி வீட்டு முன்னால் போலீஸ் கூட்டம், பாதுகாப்பு என பரபரப்பாக இருந்தது. ஏன் இத்தனை போலீஸ், பந்தோபஸ் என்ற காரணம் தெரியாமல் திருமண வீட்டார் திகைத்து இருந்தனர்.
மணமகன் தாலி கையில் எடுக்கும் நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்னால் வந்து இறங்குகிறார் வாத்தியார். 4777 வாகனம் அந்த எளியவர் வீட்டு முன்னால் வந்து நிற்பதை அந்த பகுதி மக்கள் மற்றும் பத்திரிகை அனுப்பிய அந்த தொண்டன் எதிர்பார்க்கவில்லை.
கண்கள் கலங்கி இதயம் நொறுங்கி நின்ற தொண்டனுக்கு அள்ளி கொடுத்து விட்டு, நீ மட்டும்தான் சொல்லாமல் கொள்ளாமல் செய்வாயா ? நானும் கூட தான் என்று காலை உணவை அங்கே முடித்து கொண்டு புறப்படுகிறார் மக்கள் திலகம் எம்ஜியார்.
செருப்பு தைக்கும் தொழிலாளி குடும்பத்தில் பிறந்தது போல மதுரைவீரனில் நடித்து மட்டும் வாழ வில்லை, நடப்பிலும் வாழ்ந்தவர்தான் வாத்தியார். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும். நன்றி. வேறு ஒரு புரட்சிதலைவர் தகவலுடன் உங்களை சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள் சினிமா ரசிகன்.