சக்கிமங்கலம் பகுதி சாட்டையடி மக்களின் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார் மதுரை கலெக்டர்
Madurai Collector distributed notebooks and books to children

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சக்கிமங்கலம் எல்.கே.டி.நகர் பகுதியில் உள்ள பழங்குடி சமூகத்தைச் சார்ந்த சாட்டையடி மக்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்திட ஊக்குவிக்கும் நோக்கில் கல்மேடு கலாம் சமூகநல அறக்கட்டளை சார்பாக நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
மதுரை, சக்கிமங்கலம் பகுதியில் சாட்டையடித்தும், பூம்பூம் மாடு வைத்தும் பிழைத்து வரக்கூடிய பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இம்மக்கள் 03.05.2022-அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் அவர்களை நேரில் சந்தித்து தங்களது குழந்தைகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேறகொள்ள வேண்டி கோரிக்கை மனு அளித்தார்கள்.
இதனையடுத்து, 04.05.2022-அன்று மாவட்ட ஆட்சியர் மாவட்ட வருவாய் அலுவலர் ரா.சக்திவேல் அவர்கள் ஆகியோர் சக்கிமங்கலம் பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறையின் மூலம் குழந்தைகள் கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவித்திடும் வகையில் பல்வேறு சலுகைகளையும், சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, சக்கிமங்கலம் பகுதியில் உள்ள பழங்குடி சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களது குழந்தைகளை தவறாமல் கல்வி கற்க பள்ளிக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென அறிவுரை வழங்கினார்.
இதற்கு உறுதுணையாக இருந்திடும் வகையில் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு சாதிச்சான்றிதழ் வழங்கிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சக்கிமங்கலம் எல்.கே.டி.நகர் பகுதியில் உள்ள பழங்குடி சமூகத்தைச் சார்ந்த சாட்டையடி மக்களின் குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்திட ஊக்குவிக்கும் வகையில் தன்னார்வமுடன் தாமாக முன்வந்த கல்மேடு கலாம் சமூகநல அறக்கட்டளை சார்பாக குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, கலாம் சமூகநல அறக்கட்டளை நிறுவனர் ஆ.மாயக்கிருஷ்ணன் உடனிருந்தார்.