கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீதிபதிகளின் சிகிச்சைக்கு ஸ்டார் ஓட்டலில் 100 அறைகள் புக்கிங் திடீர் கேன்சல்
Sudden cancellation of booking of 100 rooms at Star Hotel for the treatment of judges affected by Corona

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நீதிபதிகளின் சிகிச்சைக்காக ஸ்டார் ஓட்டலை டெல்லி அரசு புக்கிங் செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ‘புக்கிங்’ செய்யப்பட்ட 100 அறைகளும் அதிரடியாக கேன்சல் செய்யப்பட்டது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் நிலைமை மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தினமும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடு, தடுப்பூசி பற்றாக்குறை, ரெம்டெசிவர் பிரச்னை உள்ளிட்டவற்றால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். ஆக்சிஜனுக்காக மற்ற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை டெல்லி அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் கொரோனா சிகிச்சை பெறுவதற்காக டெல்லியில் உள்ள அசோகா எனும் ஐந்து நட்சத்திர ஓட்டலை அம்மாநில அரசு ஒதுக்கி உத்தரவிட்டது. அந்த ஓட்டலில் உள்ள 100 அறைகள் கொரோனாவுக்கான சிகிச்சை அளிக்கும் அறைகளாக மருத்துவ வசதிகளுடன் மாற்றப்பட்டுள்ளன என்று அறிவித்தது.
டெல்லி அரசின் இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘துணை நீதிமன்ற நீதிபதிகள் நீதிமன்றங்களுக்கு செல்லத்தான் வேண்டும். இதனால் அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.
இரு நீதிபதிகளை நாங்கள் இழந்துவிட்டோம். எனவே நீதிபதிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை மருத்துவமனைகளில் உடனே அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றுதான் கடந்த 25ம் தேதி உத்தரவிட்டோம்.
இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. பொதுமக்களுக்கு போதிய சிகிச்சை கிடைக்காத நிலையில், நீதிபதிகளுக்கு கொரோனா சிகிச்சை அளிக்க ஸ்டார் ஓட்டல்களை நாங்கள் கேட்டோமா? என்று, சரமாரி கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியது.
இதையடுத்து, கொரோனா சிகிச்சைக்காக நீதிபதிகளுக்கு ஸ்டார் ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை டெல்லி அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில், கொரோனா தொற்றால் பாதிக்கும் நீதிபதிகள் மற்றும் குடும்பத்தினருக்காக அசோகா ஓட்டலில் புக் செய்யப்பட்ட 100 அறைகளை டெல்லி அரசு திரும்பப்பெற்றுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.