
மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் இன்று (21.07.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் தொழில் முனைவோர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ், உலக வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு, மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி ஆகிய நான்கு வட்டாரங்களில் 137 கிராம ஊராட்சிகளில் செயல்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் இன்று (21.07.2022) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழில் முனைவோர்களுக்கு பணப்பரிவர்த்தனைக்கான கருவி BHIM Aadhaar 8 நபர்களுக்கும் மற்றும் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தின் மூலம் UDYAM சான்றிதழ்களை (MSME Certificate) 12 நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.
மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வாடிப்பட்டி குட்லாடம்பட்டி பஞ்சாயத்து அளவிலான குழு கூட்டமைப்பிற்கு பெருங்கடனாக ரூபாய் 1 கோடியே 4 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டிலான காசோலையினை பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மூலம் மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (இணை இயக்குநர் /திட்ட இயக்குநர்) காளிதாசன் , மாவட்ட செயல் அலுவலர் (வாழ்ந்து காட்டுவோம் திட்டம்) சி.ஜெயப்பிரகாஷ் மற்றும் செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.