
ஆனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு, சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையிலான நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம் சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வழக்கமாக காலை 7 மணிக்கு பின்பு தான் தாணிப்பாறை அடிவாரப் பகுதியிலிருந்து, மலைக் கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்குவார்கள்.
அமாவாசை தினம் என்பதால் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் அடிவாரப் பகுதியில் குவிந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நெரிசலை தவிர்க்கும் வகையில் காலை 6 மணிக்கே பக்தர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறையினர் அனுமதித்தனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மலைக் கோவிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வனத்துறையினர் வலியுறுத்தினர். நாளையும் சுந்தரமகாலிங்கம் சுவாமியை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.