
மதுரை அவனியாபுரம் அருகே உள்ள எம்.எம்.காலனி வழிவிட்டான் காம்ப வுண்டை சேர்ந்தவர் முருகன் மகன் வெற்றிவேல் (19) பெருங்குடி தனியார் கல்லூரியில் BCom முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்தம 30ம் தேதி நண்பர்களுடன் கோவில்பட்டி செல்வதாக கூறிச் சென்ற வெற்றிவேல் அன்று மாலை 4 மணிக்கு பின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது.
இது தொடர்பாக தாயார் ராணி பல்வேறு இடங்களில் தேடி வந்தார். கடந்த 5-ம் தேதி வெற்றிவேலை காணவில்லை என தாய் ராணி அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் அதேப் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் நண்பர்களான மாரியப்பன் மகன் அஜய் முருகன் (19) மற்றும் மலைச்சாமி மகன் மணிகண்டன்(19) ஆகியோர் அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த 30 -ம் தேதி அஜய் முருகன் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வெள்ளாளங்கோட்டை கிராமத்திற்க்கு வெற்றிவேலை தன் நண்பர் மணிகண்டனுடன் அழைத்து வந்து, ஊருக்கு வெளியேயுள்ள காட்டுப்பகுதியில் பாழடைந்த கிணற்றுக்கு அருகில் வைத்து அரிவாளால் வெட்டி, கிணற்றுக்குள் தூக்கிவீசிவிட்டு சென்றது தெரியவந்தது.
வெற்றிவேலை கொலை செய்த அஜய் மற்றும் மணிகண்டன்க டந்த 15 நாட்களாக அவனியாபுரம் பகுதியிலே சுற்றித் திரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து அவனியாபுரம் போலீசார் கொலையாளிகளை கயத்தாறு வெள்ளாளங்கோட்டை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து, வெற்றிவேல் உடலை கிணற்றிலிருந்து வெளியே எடுத்தனர். தொடர்ந்து அஜயை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தனது தங்கையை வெற்றிவேலின் நண்பர் காதலிக்க உதவியதாகவும், இதன் காரணமாகவே அவரை கடத்தி வந்து கொலை செய்ததாகவும் விசாரணையில் கூறப்படுகிறது .
மேலும் அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நண்பர்களே சக நண்பனை காதல் விவகாரத்தில் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டச் சம்பவம் அவனியாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.