
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பேருந்தில் பயணம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி அரசு பேருந்து பயணம் செய்யும் மாணவர்கள் படியில் பயணம் செய்யக் கூடாது அவ்வாறு பயணம் செய்வதினால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
இந்த நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் படியில் பயணம் செய்து மரணம் அடைவது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தமிழக முதல்வர் அறிவுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் பிரபாகரன் பேருந்தில் பயணம் செய்து மரணம் அடைந்தார் .
இதனால் போக்குவரத்து காவல்துறைதுணை ஆணையர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார், உதவி போக்குவரத்து காவல் ஆணையர் செல்வின் ஆகியோர் கூறியுள்ளதன்படி, மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பேருந்து படியில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி அவனியாபுரம் பெரியார் சிலை முன்பாக போக்குவரத்து காவல்துறை இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், பேருந்து படியில் பயணம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை மத்திய ஆர்.டி.ஓ சித்ரா,திருப்பரங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பூர்ணகிருஷ்ணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கண்ணன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம், காவலர்கள் அழகு முருகன், பால்பாண்டி,சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
படியில் பயணம் செய்த மாணவர்களுக்கு விபத்தில் ஏற்படும் பேராபத்து, உயரிழப்பு குறித்து கூறி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கபாண்டியன் உறுதிமொழி எடுக்க வைத்தார்.
மதுரை போக்குவரத்து காவல்துறை சார்பில் படியில் நிற்கும் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
மேலும், மதுரை காவல்துறையினர் தங்களது பணியை தாண்டி, இதுபோல் சமூக அக்கறையான செயல்களில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு நல்ல விழிப்புணர்வு நிகழ்வுகளை செய்து வரும் அனைத்து காவல் பணியாளர்களுக்கும் ஹலோ மதுரை சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிக்கின்றோம்.