
மதுரையில் உள்ள புகழ்மிக்க வைணவக் கோயில்களில் ஒன்று கூடலழகர் கோயில். இங்குள்ள இறைவன் ஸ்ரீ இருந்ந வளமுடையார் என்றும் அந்தரவானத் தெம்பெருமான் என்றும் அழைக்கப்பட்டார். என அறிகிறோம்.
இதற்கு ஆதாரமாக சிலப்பதிகாரத்தில் வரும் கீழ்கண்ட காட்சியைக் கூறலாம். குரவைக் கூத்து முடிந்த பின்னர் வையைக் கரையில் உள்ள நெடுமாலின் திருவடிகளைத் தொழும் பொருட்டு மாதிரி நீராடச் செல்கின்றாள்.
” ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்
பூவும் புகையும் புனைசாந்துள் கண்ணியும்
நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தத்
தூவித் துறைபடியப் போயினாள்
என்று சிலப்பதிகாரம் இதனை விவரிக்கிறது”.
இங்கே கூறப்பட்டுள்ள நெடுமாலின் திருப்பெயரை அரும்பதவுரையாசிரியர் ஸ்ரீஇருந்த வளமுடையார் என்றும் அடியார்க்கு நல்லார் அந்தரவானத் தெம்பெருமான் என்றும் கூறுகின்றனர். இருவரும் கூடலழகர் பெருமானையே வெவ்வேறு பெயரால் குறிக்கின்றனர் என்பது ஆய்வாளர்களின் முடிவு.
அந்தரவானத் தெம்பெருமான் கோடைகாலத்தில் வையைக் கரையில் எழுந்தருளுவது வழக்கம். அப்போது தண்ணீர் பந்தல் அமைக்கப்படுகிறது உண்டு. இத்தண்ணீர்ப்பந்தல் பெருமான் பெயரால் அந்தரவானத் தெம்பெருமான் தண்ணீர் பந்தல் என்றழைக்கப்பட்டது. இப்பந்தல் அமைக்கப்பட்டிருந்த தெருவும் இதே பெயரால் அழைக்கப்பட்டது.
அந்தரவானத் தெம்பெருமான் தண்ணீர் பந்தல் எனும் இப்பெயர் இன்று சிதைந்து அந்தர்வனம் தண்ணீர் பந்தல் என்று வழங்கப்படுகிறது. அந்தர்வனம் தண்ணீர் பந்தல் 1 வது சந்து, 2வது சந்து எனும் இத்தெருப் பெயர்கள் இந்நீண்ட வரலாற்றுச் சிறப்புடன் திகழ்கின்றன.